Tuesday, August 6, 2019

*வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?*

ஸ்ரீ கோரக்கர் சித்தர் எழுதிய "ரவிமேகலை" நூலில் இருந்து...

புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்..

என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது.

இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர்.

அதுவும் அகத் தூய்மைதான்.

நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது.

பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர்.

அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம்.

உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு.

இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றர் சித்தர் பெருமக்கள்.

எப்படி சுத்தமாய் வைத்திருப்பது?

எளிய விதிகள்தான், யாரும் கடைபிடிக்கலாம்.

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.

வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி கோரக்கர் தனது "ரவிமேகலை" நூலில் "பேதிகல்பம்" என்ற பெயரில் அருளியிருக்கிறார்.

"சித்தமுடன் குமரிமடல் பெரிதா யைந்து
சீவிய தன்னமோர் முடாவி லிட்டு
வித்தகமாய்க் கடுக்காய்த்தூள் பலமுந் தாக்கிப்
பிசைந்திடவே செயநீராய் நீர்த்துப் போகும்
சுத்தமுடன் வடிகட்டித் தேசிச் சாற்றுத்
துளிபத்து இட்டுவண்ணப் பேதி யாகிப்
பித்தமுடன் வாத ஐயபேதம் நீங்கும்
பிசகாமல் முக்காலை யருந்தல் நன்றே."

- ரவிமேகலை.

சோற்றுக் கற்றாழை மடல் களில் பெரிதாக உள்ளதாகப் பார்த்து ஐந்து மடல்களைக் கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள் ஒரு பலம் போட்டுப் பிசைந்தால் அது நீர்த்துப் போய் விடுமாம்.

பின்னர் அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு பத்துத் துளி விட்டு கலந்து மூன்று நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து அருந்த வேண்டுமாம்.

அப்படி அருந்தினால் வயிறு கழியுமாம். அத்துடன் வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று குற்றங்களும் நீங்கும் என்கிறார்.

இதன் மூலம் வயிறு சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்படும் என்கிறார்.

நன்றி - சித்தர்கள் இராச்சியம்..

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*
🌹🌹🌹🌹

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS