குடலைக் காக்கும் சித்த மருத்துவம்
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. செரிமான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. செரிமானக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து விரிவான தகவல்கள்.
செரிமானப் பாதை உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் யாவை?
உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், சிறுகுடல் புண், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்.
செரிமான மண்டல நோய்க்கான அறிகுறிகள் என்ன?
வயிறு எரிச்சல், வயிறு வலி, நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், மந்தம், வாயு உண்டாகுதல், உணவு எதுக்களித்தல், வயிறு புரட்டல், கவ்விப் பிடிப்பது போன்ற வலி உணர்வு, மலச் சிக்கல் அல்லது மலம் சிறிது சிறிதாகக் கழிதல், நீராகவோ அல்லது ரத்தம் சளியுடனோ மலம் கழிதல், வயிறு கடுத்தல், கழிதல் ஆகியன பொதுவான அறிகுறிகள்.
குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன?
உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப் பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
No comments:
Post a Comment